இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் மற்றும் பேபி கிருத்திகா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அருள்வான்’
மலைவாழ் மக்களின் கலாச்சாரம், அவர்களின் வழிபாட்டு முறைகள் மற்றும் அவர்கள் படும் வலிகளை மிகவும் நேர்த்தியாகவும் எதார்த்தமாகவும் இயக்குநர் பதிவு செய்துள்ளார்.
தேனி மலைக்கிராமத்தில் காடர் என்னும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நடக்கும் கதை இது.அக்கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதிகளோ, கல்விக்கான வாய்ப்புகளோ இல்லை.
கல்வி அறிவு இல்லாததால் தங்கள் நிலத்தையும் உரிமைகளையும் அதிகார வர்க்கத்திடம் இழந்து தவிக்கும் ஒரு பழங்குடியின சமூகம். அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா), தனது தாத்தாவின் கடைசி ஆசையை ஏற்று, எப்படியாவது படித்து தன் கிராமத்திற்கு ஒரு பள்ளிக்கூடத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சபதம் எடுக்கிறாள்.
தன்னுடைய லட்சியத்திற்காக 15 கிலோமீட்டர் நடந்து சென்று படிக்க முயலும் அவளுக்கு, வயதுக்கு வந்தவுடன் ஊர் வழக்கப்படி திருமணம் செய்யப் பார்க்கிறார்கள். அதிலிருந்து தப்பித்து, தேனி மாவட்டத்தின் நேர்மையான கலெக்டரான முத்துவேலை (அருள்நிதி) சந்திக்க ஓடுகிறாள். கலெக்டரை சந்தித்து அந்த சிறுமி தன் கிராமத்திற்குப் பள்ளியை எப்படிக் கொண்டு வருகிறாள், அவளது லட்சியப் பயணம் வென்றதா இல்லையா என்பதே ‘அருள்வான்’ படத்தின் மீதிக்கதை.
ஆரவ் அவர் மனைவியாக ரம்யா பாண்டியன் இவர்களுடைய மகள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கலேக்டராக அருள்நிதி அவர் பங்கை சிறப்பாக செய்ததோடு ஒரு அரசு அதிகாரி சரியாக இருந்தால் எத்தனை நன்மைகள் நடக்கும் என்பதை அழகாக செய்துள்ளார்.
ஜான் விஜய், காளி வெங்கட், விடிவி கணேஷ் என இதில நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சுகுமாரின் ஒளிப்பதிவு மலைகளின் அழகையும், அதே சமயம் அந்த கரடுமுரடான பாதையின்y வலியையும் அற்புதமாகப் படம் பிடித்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.
கல்வியின் அருமையை ஆழமாக சொன்னதற்கே இயக்குனருக்கு பாராட்டுக்கள்.