Take a fresh look at your lifestyle.

இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

5

*”சினிமாவில் சாதனைக்கு மரியாதையில்லை… வணிகத்தை நோக்கி என் பயணம்!” – இயக்குநர் ஷிவ் மாதவ்*

*ஹாலிவுட் தரத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சூப்பர் ஹீரோ படம்: களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ்*

*மறைந்த இயக்குநர் பாக்யராஜ் கொடுத்த ஊக்கம் ; புதிய படம் குறித்து மனம் திறக்கும் இயக்குநர் ஷிவ் மாதவ்*

திரையுலகில் நுழையும்போதே புதுமையான முயற்சிகளுடன் அடியெடுத்து வைக்கும் வெகுசில படைப்பாளிகளில் ஒருவர் தான் இயக்குநர் ஷிவ் மாதவ். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ல் அறிவியல் கதையம்சத்துடன் வெளியான படம் ‘3.6.9’.

உலகளவில் வெறும் 81 நிமிடங்களில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற சாதனையையும், தமிழ்நாட்டிலிருந்து இரண்டு உலக சாதனைகளைப் பெற்ற முதல் படமாகவும் இது அமைந்தது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும், முறையான விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் இப்படம் மக்களிடையே பெரிதும் சென்றடையாமல் போனது.

இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி என ஒவ்வொரு மொழியிலிருந்தும் மிகப்பெரிய நடிகர்களை வைத்து, ஒரு பிரம்மாண்டமான கமர்சியல் மற்றும் அறிவியல், பேண்டசி கலந்த சூப்பர் ஹீரோ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் ஷிவ் மாதவ்.

இப்படத்தின் ப்ரீ-புரொடக்சன் பணிகள் மற்றும் மினியேச்சர் ஒர்க்குகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

*படம் குறித்து இயக்குநர் ஷிவ் மாதவ் கூறும்போது,*

“என்னுடைய முதல் படம் ‘3.6.9’. தமிழ்நாட்டில் இரண்டு உலக சாதனை செய்த முதல் படமாக அமைந்தது. ஹாலிவுட்டில் கூட யாரும் இதை முயற்சி பண்ணல. 81 நிமிஷத்துல 100 பேர் நடிச்ச ஒரு படத்தை ஒருத்தர் எடுத்தாருங்கிறது மக்களுக்கு தெரியாமயே போயிருச்சு. அந்த ரெண்டு உலக சாதனை கிடைச்சதுக்கு அப்புறம் நாம பெரிய அளவுல போயிருவோம் அப்படின்னு நினைத்த போது, நான் நினைத்த எதுவுமே இங்க நடக்கல. என்னுடைய கனவுகள் எல்லாம் அப்படியே தகர்ந்த மாதிரி ஆயிருச்சு.

நார்த்ல, கேரளாவுல இப்படி ஒரு சாதனை படம் எடுத்தது தெரிஞ்சதும் அவ்வளவு வரவேற்பு கொடுக்கிறாங்க. ஆனா, என்னோட தமிழ்நாட்டுல எனக்கு அந்த மரியாதை இல்லை.

அதேசமயம் கடந்த மூணு வருஷமா, வேற பல தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி மீண்டும் சாதனை படங்களை எடுக்கலாம் என்று கூறி என்னைத் தேடி வந்தார்கள். ஆனால் திரும்பவும் சாதனை படம் எடுக்கிறேன் என என்னுடைய அடையாளம் தெரியாமல் போக நான் விரும்பவில்லை. காரணம், சாதனைக்கு இங்கே மரியாதையே இல்லாம போயிருச்சு. சினிமா என்பதே வணிகம் தான். அதனால், வணிகத்தை நோக்கி நாமும் பயணிப்போம் என்கிற புரிதலுடன் தற்போது புதிய படத்திற்குத் தயாராகி விட்டேன்.

இந்தப் புதிய படத்தின் கதைக்களமும் விஞ்ஞான பின்னணியில் தான் உருவாகியுள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் முதன்முதலா, அதிக செட் போட்டு, சிஜி இல்லாம நிறைய முயற்சிகளை உள்ள கொண்டு வருகிறேன். மினியேச்சர்களை பயன்படுத்தி பெரிய பட்ஜெட்டில் கமர்சியலா, ஜாலியா, அதே நேரம் எண்பதுகளில் நடக்கிற ஒரு கதையை மையமா வச்சு, அதுல ஒரு விஞ்ஞானம், ஒரு ஃபேண்டஸி கலந்த ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டாக இது இருக்கும். அந்தவகையில் நான் எதிர்பார்த்து வந்த சினிமா, இப்ப எனக்கு கிடைக்கப் போகுது என்கிற நம்பிக்கையுடன் நான் பயணிக்கிறேன்.

உலகத்திலேயே யாரும் பண்ணாததை நாம பண்ணனும், அப்படின்னு நினைச்சு வரும்போது, நான் நினைச்ச விஷயத்தை விஷுவலா சொல்ல முடியாம போகுது. இந்த புதிய படத்தில் வழக்கமான சினிமா அம்சங்கள் எல்லாமே இருக்கும். அதே நேரம், நான் ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன், அதுவும் இதுல உள்ள இருக்கு. இதிலும் உலக சாதனைதான் பண்ண முயற்சிக்கிறேன். ஆனால் அது என்னோட முயற்சியில், ஹாலிவுட்டுக்கு நிகரா, நிறைய விஷயங்கள், படத்தோட மேக்கிங்ல பண்ணனும்னு நினைக்கிறேன்.

இந்த மூணு வருஷத்துல விஎஃப்எக்ஸ்ல இருந்து, ஏஐ உட்பட டெக்னிக்கலா நிறைய என்னென்ன பண்ணலாம்னு எல்லாம் கத்துக்கிட்டு வந்துட்டு, இப்ப படம் பண்றதுக்கு தயாராகி களத்துல இறங்குறேன்.

அதற்கேற்ற மாதிரி நடிகர்கள், டெக்னிஷியன்கள் எல்லாமே பெரிய பெரிய ஆளுங்கதான். இப்ப முன் தயாரிப்பு பணிகள் முடிஞ்சு, மினியேச்சர் ஒர்க் எல்லாம் நடந்துட்டு இருக்கு. படப்பிடிப்பு அக்டோபர்ல துவங்க இருக்கு. இது முழுக்க முழுக்க எல்லாமே ராமோஜி ஃபிலிம் சிட்டிலதான் நடக்கப் போகுது.

என்னுடைய முதல் படத்தில் பாக்யராஜ் சார் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவர் இப்போ நம்முடன் இல்லை. நான் சில சமயம் சோர்ந்துபோன நேரங்களில் கூட பாக்கியராஜ் சார், “ஷிவா, உன்கிட்ட ஒரு பெரிய பொட்டன்ஷியல் இருக்கு. நம்பிக்கையோட ஓடு, உன்னால முடியும்”னு சொல்லி எனக்கு உந்து சக்தி கொடுத்தாரு. பல சமயங்களில் அவரோட வீட்டுக்கு கூப்பிடுவாரு, என்னை வரவச்சு, மோட்டிவேஷன் பண்ணி அனுப்புவாரு. அந்த மாதிரி ஒரு குருவை இழந்தது ஒரு பெரிய வேதனை.

அவர் இறந்த தினத்தன்று அவரது கால்மாட்டிலேயே தான் நின்றுகொண்டு இருந்தேன். என் முதல் படம் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அவரும் அந்த படத்தைப் பத்தி எனக்காக நிறைய பேசி இருக்காரு. இப்பவும் சாரோட ஆசீர்வாதம் எனக்கு இருக்குன்னு நம்புறேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.