Take a fresh look at your lifestyle.

பெத்லகேம் குடும்ப யூனிட் – சினிமா விமர்சனம்

5

தமிழ் சினிமாபோல் கோபம், ஆத்திரம், அழுகை, வீரம், வெறுப்பு என்று சினிமாவில் காட்டப்படும் அத்தனை உணர்வுகளையும் வகைப்படுத்தும்படியாக இல்லாமல் ஒரு மென்மையான தன்மையைப் பயன்படுத்தி கதை சொல்லும்போக்கு மலையாள சினிமாவில் அதிகம் உண்டு.

அந்த வகையில் சினிமாவில் அழியாத சப்ஜெக்டாக இருக்கும் காதலை முன் வைத்து வந்திருக்கும் இந்தப் படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளி நகரின் அருகே இருக்கும் ஒரு சிறு கிராமம் முண்டக்கயம்.

இந்தக் கிராமத்திலிருந்து எர்ணாகுளம் அருகே இருக்கும் கருங்காட்டி என்ற பகுதிக்கு குடி வருகிறார் ஆஷ்லி என்ற மமீதா பைஜு.

இவருடைய அப்பாவின் தீவிரமான குடிப்பழக்கம் காரணமாகத்தான் இந்தக் குடும்பம் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறது.

அதோடு மமீதா தான் படித்த கல்லூரியில் படிப்பையும் விட்டுவிட்டு இங்கே எர்ணாகுளம் அருகில் இருக்கும் வேறொரு கல்லூரியில் சேர்ந்து தொடர்ந்து படிக்கிறார்.

இவருடைய வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் இருப்பவர் ஜஸ்டின் என்ற நிவின் பாலி. வயது முப்பதை தாண்டிவிட்டாலும் இன்னமும் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை.

இவருடைய தம்பியான ஜோயல் ஷார்ட் பிலிம் எடுக்கிறேன் என்று சொல்லி நிவின் பாலியை மேலும் கடனாளியாக்கிக் கொண்டிருக்கிறான்.

மமீதாவும், நவீன் பாலியும் அடிக்கடி சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது நவீன் பாலின் மீது அந்தப் பகுதி மக்களும், இளைஞர்களும் வைத்திருக்கும் அன்பும், பாசமும் மமீதாவை கவர்கிறது. அதனால் அவர் மீது தன் பார்வையை அழுத்தமாக பதிக்கிறார் மமீதாவின் இந்தக் கவனிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நவீன் பாலியை நோக்கி காதலில் தள்ளுகிறது. தானும் அந்தக் காதலில் விழுந்துவிட்டதாக ஒரு நாள் உணர்கிறார் நவீன் பாலி. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒத்துக் கொள்கிறார்கள்.

இந்த விஷயம் மமிதாவின் மாமா மூலமாக அவரது அம்மாவுக்கு தெரிய வர அவர் அதை விரும்பவில்லை. மமிதாவை கோழிக்கோடு அருகில் வசிக்கும் அவருடைய பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

மமீதாவை கடத்தி வந்து திருமணம் செய்ய நவீன் பாலிக்கு விருப்பமில்லை. இரண்டு குடும்பத்தினரின் சம்மத்துடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால், மமிதாவின் அம்மாவோ அவரை அயர்லாந்துக்கு அனுப்பி வைக்க பெரும் முயற்சி எடுக்கிறார்.

இன்னொரு பக்கம் மமீதா இனிமேல் நிவின் பாலியை நினைக்கமாட்டேன் என்று அவருடைய குடும்பத்தினரிடம் சத்தியம் செய்கிறார். இந்த செய்தியும் நிவின் பாலிக்கு வந்து சேருகிறது.

குடும்பத்தினரும், அவருடைய நண்பர்களும் இந்தக் காதலை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான முயற்சியையும் எடுக்கிறார்கள்.

அவர்களுடைய விருப்பம் நிறைவேறியதா? இவர்கள் இருவரின் திருமணம் நடந்தேறியதா? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

நிவின் மாலியின் தோற்றம் வயது முப்பதை தாண்டியது போலவே தெரிவதால் அந்த யதார்த்தமே இந்தப் படத்தில் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சாக காட்டப்பட்டுள்ளது.

தற்செயலாக மமீதாவை அவர் சந்திக்கும் காட்சிகளில் மமீதா அவரைப் பார்த்தவுடன் விருட்டென்று ஓடுவதும் அதை பார்த்து நிவின் ஜெர்க்காகி நிற்பதும் ஒரு சுவையான காட்சி.

இதன் பின்பு இருவரும் சந்திக்கும் பொழுது நிவினுக்குள் ஏற்படும் அந்த தடுமாற்றமே அவருடைய காதலின் முதல் படியாக இருக்கிறது. அந்த உணர்வை மிக அழகாக, இயல்பாக காட்டியிருக்கிறார் நவீன் பாலி.மமீதா.தம்பிக்காக அடிதடிவரையிலும் இறங்குகிறார் நிவின். அந்த சண்டை காட்சிகளில்கூட சினிமா சண்டைபோல் இல்லாமல் மிக எதார்த்தமான காட்சிகளாக அமைத்து இருப்பதால் அதிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் நிவின்.

பாடல் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்டுகளில் அவர் காட்டுகின்ற முக பாவனைகளும் நடிப்பும்.. பொதுவாக நடிகைகளிடம் மட்டுமே கிடைக்கும். அதை நிவின் கைப்பற்றிவிட்டார் என்றே சொல்லலாம்.

தன்னுடைய வயதுக்கேற்ற பக்குவத்துடன் மமீதாவை கடத்தி வந்து திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக அவர் சொல்லும்பொழுது கை தட்ட வைத்துவிட்டார். இதுதான் உண்மையான காதல் என்று நாம் சொல்லலாம்.

நிவின் இங்கே விரும்புவது மற்றவர்களுக்காக செய்யப்படும் காதல் அல்ல. அவருடைய திருமணத்திற்காக செய்யப்படும் காதல் என்பதால் இந்தக் காதலை நாம் வரவேற்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பில் நியாயப்படுத்தி இருக்கிறார் நிவின் பாலி.

இன்னொரு பக்கம் மமீதா பைஜு தன்னுடைய சிறப்பான நடிப்பினால் பெண் ரசிகைகளையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார்.

அவருடைய முகத்தில் காட்டும் சின்ன, சின்ன காதல் உணர்வுகள்.. வெட்கப்படுவது, கோபப்படுவது, கிண்டல் செய்வது என்று மமீதாவுக்கு வைத்திருக்கும் குளோஸப் ஷாட்டுகளே அவரை மிகவும் பிடிக்க வைத்திருக்கிறது.

மமீதாவின் அம்மாவாக, அப்பாவாக நடித்தவர்கள், நிவின் பாலியின் அம்மா, அப்பாவாக நடித்தவர்கள் என்று இரு தரப்பு பெற்றோரும் தனித்தனி கேரக்டர் ஸ்கெட்ச்சுகளில் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

நிவின் பாலியின் 45 வயது நண்பராக நடித்திருக்கும் பைஜூவும் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய தம்பியாக நடித்திருக்கும் சந்தீப் பிரதாப்பும் ஒரு அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். படம் முழுவதும் துரு துரு என்று ஓடிக் கொண்டே இருக்கும் சந்தீப் இளைஞிகளை கவர்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
படம் நெடுகிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நகைச்சுவை தெளித்துக் கொண்டே இருப்பதற்கு முழுமையான காரணம் இந்த எடிட்டர்தான்.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., பழமையான காதல் என்ற அந்த சப்ஜெக்டை புதுமையான திரைக்கதையில் எதார்த்தமான நடிப்பினால் அழகாக படப் பதிவு செய்து நமக்கு கொடுத்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் சிச்சுவேஷன் காமெடி என்று சொல்லப்படும் அளவுக்கு திரைக்கதைகளும், பல வசனங்களின் மூலமாகவும் நகைச்சுவையை கொடுத்து நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்

படம் முழுவதிலும் ஒரு கண்ணியமான காட்சி அமைப்புகளாலும், குளிர்ச்சியான வசனங்களினாலும் இப்படி ஒரு சம்பவம் நம் வீட்டில் நடந்தால் நாம் எப்படி அதை எதிர்கொள்வோம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு சொல்லிக் கொடுக்கும்விதமாகவும் இந்தபா படத்தினை நன்கு வடிவமைத்து உருவாக்கி கொடுத்திருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

படத்தில் குறை எதுவுமே இல்லையா என்று கேட்டால் இருக்கிறது.

முதலில் மமீதாவின் அம்மா இந்தக் காதலை ஏன் எதிர்க்கிறார் என்பதற்கான வலுவான காரணத்தை எந்த இடத்திலும் இயக்குநர் சொல்லவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

அடுத்தது அதிகமான குடியை படம் முழுவதும் காட்டி இருப்பதுதான். அதோடு பெண்களும் குடிப்பது போல காட்சிகளை வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

கேரளாவில் வீட்டுக்கு வீடு இப்படித்தான் குடிப்பார்கள் என்றாலும் அடுத்த தலைமுறையாவது இந்த குடியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சினிமா துறைக்கு இருப்பதால் இந்தக் காட்சிகளையாவது இயக்குனர் நீக்கி இருக்கலாம்.