Take a fresh look at your lifestyle.

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”…நடிகை அனிஷ்மா அனில்குமார்!

6

‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அனிஷ்மா அனில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய கதாபாத்திரம் தனக்குள் நிறைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு பெண் அல்ல. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் அழகு இருப்பதாக நான் உணர்கிறேன். குறிப்பாக, பெண்கள் பல நேரங்களில் ஒரே சமயத்தில் பல்வேறு உணர்வுகளை அனுபவிப்பார்கள். அதிலும், அவர்கள் முற்றிலும் புதிதான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது அந்த உணர்வுகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால், வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அவரை சித்தரிக்காமல், உண்மைத்தன்மையுடன் அணுக வேண்டும் என்று விரும்பினேன்” என்றார்.

“ஒரு நடிகையாக என்னுடைய முதிர்ச்சியான பக்கத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது. கதையில் நகைச்சுவையும் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. ஆனால், அந்தச் சூழ்நிலையில் மிகவும் உண்மையான உணர்வுகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒரு பெண் தனது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நுழையும்போது ஏற்படக்கூடிய எதிர்பார்ப்புகள், பதற்றம் மற்றும் பல்வேறு சந்தேகங்கள் போன்ற உணர்வுகள் இதில் இருக்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தை நடிக்க எனக்கு வாய்ப்பளித்த ராஜாவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. கதாநாயகன் ரிஷிகாந்தும் சிறப்பாக நடித்துள்ளார். எங்களது கதாபாத்திரங்களுடன் நிச்சயம் பார்வையாளர்கள் தங்களை பொருத்தி பார்ப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

கதையின் நகைச்சுவையான சூழ்நிலைகளில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே அனிஷ்மாவின் கதாபாத்திரம் இல்லாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான மாற்றத்தின்போது உருவாகும் அமைதியான மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தவும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் அவருக்கு வாய்ப்பளித்துள்ளது. உறவுகள், குடும்பச் சூழல்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் வழியாக கதை நகரும் நிலையில், அனிஷ்மா கதாபாத்திரம் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அசோக் அர்ஜுனன் படத்தொகுப்புப் பணியை கவனித்துள்ளார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகவும், ஏ. பாலுமகேந்திரா கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

தனது ஆரம்பகால படங்களிலேயே மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ள அனிஷ்மாவுக்கு, ‘மொத ராத்திரி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும். உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.