’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர் ரவி சங்கர், “நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. ராஜா கதை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்து விட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல சின்ன பட்ஜெட்டில் வந்த நல்ல படங்கள் வெற்றியடைந்துள்ளது. அதுபோல, இந்தப் படமும் நல்ல கதைக்களம் கொண்டிருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரசிகர்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி”.

இயக்குநர் வெங்கடேஷ், “இந்தப் படத்தை இயக்க புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. ‘அங்காடி தெரு’ படத்திற்கு பின்பு நெகட்டிவ் கதாபாத்திரங்கள் தான் எனக்கு அதிகம் வந்தது. ஆனால், இதில் வித்தியாசமான கதாபாத்திரம். நடிகர் ரிஷிகாந்த் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் எங்கே அவர் நடிப்பில் என்னை ஓவர் டேக் செய்து விடுவாரோ என்று கவனத்துடனே நடித்தேன். நிச்சயம் பெரிய நடிகராக வருவார். உதவி இயக்குநர்கள், படக்குழுவினர் என அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

எடிட்டர் அசோக் அர்ஜூனன், “பெரிய நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது என்னும்போதே படத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது. உங்கள் அனைவரது ஆதரவும் நிச்சயம் தேவை”.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பரஞ்சோதி, ” புதியவர்களான எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் சேத்தன், “இயக்குநர் ராஜா இந்த கதை சொல்லும்போது குடும்பமாக அமர்ந்து கேட்டு சிரித்தோம். முதலில் என் மனைவியை தான் நடிக்க கேட்டிருந்தார்கள். ஆனால் டேட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. இது போன்ற புது அணியினருக்கு ஆதரவு கொடுக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.

இசையமைப்பாளர் பரத் சங்கர், ” படத்தின் இயக்குநர் ராஜா வெள்ளந்தியான மனிதர். ஆனால், படம் அதற்கு நேர்மாறாக சிறப்பாக வந்துள்ளது. படத்தில் அனைவரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி! ஆகஸ்ட் 21 அன்று படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

இயக்குநர் ஸ்ரீகணேஷ், ” படத்தின் கதாநாயகன் ரிஷி எனக்கு 10 வருடங்களுக்கு மேலாக பழக்கம். கதாநாயகனாக அவர் இந்தப் படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. படம் சிறப்பாக வந்துள்ளது. படக்குழுவினர் பலருக்கும் இது அறிமுக படம். சிறப்பாக உழைத்துள்ளனர். இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இது இருக்கும்”.

நடிகை அனிஷ்மா, ” இந்தப் படத்தில் என்னை தேர்வு செய்த இயக்குநர், தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் முத்து செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன், “திறமையான நடிகர்களை தேர்வு செய்வதிலேயே படம் பாதி வெற்றியடைந்து விட்டது. இந்தப் படத்தின் மூலம் புது உலகத்திற்கு சென்று விட்டு வந்திருக்கிறேன். படத்திற்கு உங்களுடைய ஆதரவும் தேவை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி”.

இயக்குநர் பாரி, “என்னைப் போன்று பல கனவுகளோடு கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வரும் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் படங்களில் ஒன்றாக இந்த படத்தை நான் பார்க்கிறேன். ஒரு கருத்தை நகைச்சுவையாக சொன்னால் இன்னும் அதிக பேரை சென்றடையும். பல கருத்துக்களை இந்த படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். ரிஷிக்காகவே இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பெரிய படங்கள் எப்போதும் உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால், சின்ன படங்கள் தான் ஆச்சரியப்படுத்தும். அதனால், இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ” ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடிப்பவர் ரிஷி. இந்தப் படத்தை பார்க்கும் பொழுது பாக்யராஜ் சாருடைய படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது. எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ‘அயலான்’ ரவிக்குமார், “எதை படமாக எடுக்கிறார்கள் என்பதில் தான் ஒரு இயக்குநரின் திறமை உள்ளது. அந்த வகையில் இந்த படத்தை இயக்குநர் சிறப்பாக எடுத்து உள்ளார். நடிகர் ரிஷி ஹீரோவாக அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார் என்பதை படம் பார்க்கும்பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த கதையை தயாரிப்பு நிறுவனம் புரிந்து கொண்டு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. படம் நிச்சயம் வெற்றி பெறும்”.

இயக்குநர் ராஜா கருப்பசாமி, ” ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனால் தான் இந்த படம் இன்று உருவாகியுள்ளது. அவருக்கு மிக்க நன்றி. என் கதையின் ஆன்மாவை புரிந்து கொண்டு வாய்ப்பளித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த எனக்கு ஆதரவு கொடுத்த நண்பர்கள், குடும்பத்தினர், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சின்ன பட்ஜெட் படங்கள் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். என்னுடைய அனுபவத்திலிருந்து உருவான கதை தான் இந்த படம். என் வாழ்க்கையின் அனைத்து பெண்களுக்கும் இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். நிகழ்விற்கு வந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி”.

நடிகர் ரிஷிகாந்த், “பல படங்களில் என்னுடைய கதாபாத்திரங்களை கவனித்து பாராட்டிய ஊடகங்களுக்கு என்னுடைய முதல் நன்றி. அதேபோல நான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கும் உங்கள் அனைவரது ஆதரவும் தேவை. ‘மொத ராத்திரி’ படத்தின் கதை ஷார்ட் ஃபிலிமாக ராஜா கொண்டு வந்தார். அதன் பிறகு ஆறு வருடம் பயணம் செய்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். என்னை விட்டுக் கொடுக்காத இயக்குநருக்கும், கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. நல்லதொரு படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. நிச்சயம் குடும்பமாக இந்த படத்தை ரசிப்பீர்கள். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. திரையரங்குகளில் படம் பாருங்கள்”.

Comments (0)
Add Comment